Thursday, 13 February 2020

நலமுடன் வாழ சில பயனுள்ள குறிப்புகள

நலமுடன் வாழ சில பயனுள்ள குறிப்புகள்



*காலையில் எழுந்தவுடன் உங்களை அறியாமல் நீங்கள் உங்கள் கைளை நீட்டுவீர்கள். முதுகை பின்புறம் வளைப்பீர்கள். கழுத்தினை இருபுறமும் திருப்புவீர்கள். இது நீங்கள் உணராமலேயே நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் ‘ஸ்டிரெச்’ பயிற்சி யோகா. இதனை சில நிமிடங்கள் முறையான பயிற்சியாக செய்து விடுங்களேன். உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தி கூடும். முதுகு வலியினை நீக்கும்.

* காலை உணவுதான் பல ஆக்கப் பூர்வ செயல்களை உடலுக்கு கொடுப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அநேகர் எடை குறைய வேண்டும் என்ற கருத்தில் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். நேரமின்மை என்ற காரணத்தினை காட்டி காலை உணவினை தவிர்த்து விடுவார்கள். இவர்களை நீங்கள் பார்த்தால் அநேகர் எடை கூடியவர்களாக இருப்பார்கள். பழம், நார்சத்து நிறைந்த தானியம், கொழுப்பில்லாத பால் அல்லது தயிர் முட்டை போன்றவைகளை சேர்த்து காலை உணவாக உண்ணும்போது நீங்கள் அறியாமலேயே உங்கள் உடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றது.

* பல் தேய்ப்பது என்பது இன்னமும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலருக்கு வகுப்பே எடுக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. அரை நிமிடம் கூட பல் தேய்க்காத அவசரம் பலருக்கு இருக்கின்றது. சிலர் கரடு முரடாக பல் தேய்ப்பதை போல் பல், தேய்த்து பல்லினையும், ஈறுகளையும் பாதிப்படைய செய்து விடுவார்கள். ‘ப்ளாஸ்’ எனப்படும் பல் இடைவெளிகளை சுத்தம் செய்யும் பழக்கம் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகின்றது. மருத்துவரைப் போல், பல் மருத்துவர் ஒருவரும் மிகவும் அவசியம்.

* மூளையினை சோம்பேரியாக விட்டு விடாதீர்கள். ‘செஸ்’, ‘பஸில்’ போன்றவை மூளையினை கூர்மையாக்குபவை. இப்படித்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. இடது கையால் பிரஷ் கொண்டு பல் துலங்குங்கள். கண்களை மூடி துணியின் நிறத்தினை கண்டுபிடிக்க முயலுங்கள். குறுக்கெழுத்து போட்டி முயற்சி செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.

* தியாகம் என்பது மிகப்பெரிய பொருள் நிறைந்த வார்த்தை அது அனைவருக்கும் எளிதாய் வந்து விடாது. ஆகவே நான் என் குடும்பத்திற்காக தியாகம் செய்தேன். ஆயினும் யாரும் என்னை மதிக்கவில்லை என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவே செய்யுங்கள்.

* பிரார்த்தனை செய்பவர்கள், கடவுளை வேண்டுபவர்கள் நோய் வாய்பட்டால் எளிதில் வெளிவந்து விடுகின்றார்கள் என ஆய்வு கூறுகின்றன. அநேகருக்கு பிடித்த தெய்வம் இருக்கும். பிரார்த்தனை செய்யுங்கள். பேசுங்கள் வேண்டுங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? தவறில்லை, உங்கள் ஆன்மாவோடு உங்கள் மனதோடு, உங்களோடு பேசுங்கள், தேவைகளைக் கேளுங்கள், உடல் ஆரோக்கியம் நிலைக்கும்.

* தினமும் கொழுப்பில்லாத பால், தயிர் உங்கள் உணவில் இடம் பெறட்டும். உங்களது கால்ஷியம் தேவையினை மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

* 30 வயதிற்கு மேல் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு என்பதனை நன்கு உணருங்கள்.

* புகை பிடிப்பதனை உறுதியாய் நிறுத்துங்கள்.

* புகை பிடிப்பவரிடமிருந்து தள்ளி இருங்கள்.

* ஒரு கிரீன் டீ நாள் ஒன்று எடுத்துக் கொள்ளலாமே.

* மிளகு, பட்டை, வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள் இவற்றினை முடிந்தவரை அடுப்பில் சமைக்காது எடுத்துக் கொள்வது மிக நல்ல பலனை அளிக்கும்.

* தக்காளியில் உள்ள லைகோபேன் புற்று நோயையும் எதிர்க்கும் சக்தி படைத்தது. வைட்டமின் ‘சி’ நிறைந்தது. சலட் உணவில் அன்றாடம் - ஒரு - இரண்டு தக்காளியினை முடிந்தவரை சமைக்காத உணவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளியும், ஆப்பிளும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை தடுக்க வல்லது.

* நார் சத்து மிகுந்த தானியம், கொட்டைவகைகள், வாழைப்பழம் இவை மூளையில் செரடோனின் சுரக்கச் செய்யும். செரடோனினே ஒருவரை நல்ல ஆக்க உணர்வாக இருக்க செய்யும்.

* வைட்டமின் ‘ஏ’ சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமானது. பால் சார்ந்த பொருட்கள், பச்சை, மஞ்சள் காய்கறிகள், பப்பாயா, மாம்பழம் இவைகள் உணவில் சேர வேண்டும் என்பதனை குறிப்பாக இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

* சுத்தமான நீர் அவசியம். அதற்காக மிக அதிகமான நீர் குடிப்பதும் ஆபத்தினை விளைவிக்கும்.

* தினமும் நடக்கவும். அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். தினமும் சில நிமிடங்கள் நன்கு வேகமாக நடக்க வேண்டும்.

* உங்கள் ஹார்மோன்களின் செயல்பாட்டு திறனை 25 வயதிற்குப் பிறகு முறையான பரிசோதனை மூலம் அறிவது உங்களை வெகுவாய் காப்பாற்றும்.

* வெயிலில் இருந்து சருமத்தினை பாதுகாக்கும் கிரீம் அவசியம் தடவுங்கள்.

* சந்தோஷமா? சிரித்து விடுங்கள், மன வருத்தமா? அழுது விடுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியினை காக்கும்.

* கொதிக்க கொதிக்க நீரினை தலையில், உடலில் ஊற்றி குளிக்காதீர்கள். சிறு குழந்தைகளை இவ்வாறு செய்யும் வழக்கம் இன்னமும் இருக்கின்றது. அலற, அலற குழந்தைகளை இப்படி குளிக்க வைப்பது அக்குழந்தைகளுக்கு கடும் தீமைகளை விளைவிக்கும் என்பதனை அறியுங்கள்.

* ‘ரிலாக்ஸ்’- உடலை கடுமையான ஸ்டிரெஸ் கொண்டு தாக்காதீர் உங்களுக்கு பிடித்த வகையில் உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளுங்கள்.

* ‘டயர்டாக்‘ சோர்வாக உணர்கின்றீர்களா? சற்று உடற்பயிற்சி செய்து பாருங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

* இன்றைய இளம் தாய்மார்கள் சிறு குழந்தைகளை வளர்க்கும் காலத்தில் மிகவும் மன உளைச்சல் அடைந்து விடுகின்றனர். காரணம் கூட்டு குடும்பம் இல்லை. இது அவரவர் விருப்பத்தினை பொறுத்தது என்றாலும் அத்தாய்மார்கள் உடல் அளவிலும் மன அளவிலும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் தன்னை மன மகிழ்வோடு வைத்துக் கொள்ள தினம் வீட்டிலேயேவாது 20 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். சற்று வெளியே வந்து இயற்கையோடு இருக்க வேண்டும். கணவர் மற்றும் வீட்டில் இருக்கும் நபர்களுடன் இரவு உணவினை சேர்ந்து உண்ண வேண்டும். குழந்தையோடு சிறிது நேரம் சிரித்து விளையாடுங்கள்.

* மீன் உண்ணும் பழக்கம் உடையவர்கள் இந்த உணவினை நன்கு எடுத்துக் கொள்ளலாம்.

* மனைவியின் உடல் நலனுக்கு அக்கறை கொடுங்கள். மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டால் கணவன் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது.

* ஓம் என காலையில் சில முறை சொல்வது சைனஸ் பகுதிகளை அடைப்பின்றி வைக்கும்.

* இடுப்புக்கு கீழே சாதாரன நீரில் சிறிது நேரம் இருப்பது வலிக்கும் சதைகளின் வலியை நீக்கும்.

* குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்குங்கள்.

* உடலை உறுதியாய் வைத்திருங்கள். அதற்காக எலும்பும் தோலுமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

* அதிக வெள்ளைப் பொருட்களை தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கின்றனர். அரிசி, மாவு, சர்க்கரை இவற்றினை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

* ப்ரோக்கோலி எனப்படும் பச்சை காலிபிளவர் கல்லீரலை சுத்தம் செய்ய வல்லது.

* 40 வயதினை கடந்தவர்கள் வைட்டமின் டி தேவையா என்பதினை அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* சாப்பிட்டவுடன் ‘ஸ்வீட்’ வேண்டும் என்ற பழக்கத்தினை நீக்கி சிறிதளவு பழம் எடுத்துக் கொள்ளுங்கள்.

* இளைக்க வேண்டுமா? நன்கு தூங்குங்கள்.

* சிகப்பு அசைவத்தினை முடிந்தால் அடியோடு தவிர்த்து விடுங்கள். மிகப்பெரிய ஆபத்தினை இது உடலுக்கு ஏற்படுத்தலாம்.

* காலையில் 150 மி.லி. வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.

* வெறும் வயிற்றில் கடின உடற்பயிற்சி செய்யாதீர்கள்.

* எப்பவும் சோகமாகவே இருக்காதீர்கள். இதுவே மிகப்பெரிய நோய்.

* நாள் ஒன்றுக்கு மூன்று முறை என்றில்லாமல் 5 முறை என்று உணவினை பிரித்து உண்ணுங்கள். இதில் பழங்கள், நீர், சாலட் என பிரித்துக் கொள்ளலாம்.

* 20 வயதிற்குப் பிறகு மருத்துவ ஆலோசனை படி உங்களுக்குத் தேவையான வைட்டமின்களை அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பகல் உணவோ, இரவு உணவோ காய்கறி சாலட் உடன் ஆரம்பிக்க வேண்டும்.

* 10-15 நிமிடங்கள் வரை காலை அல்லது மாலை சூரிய ஒளி உடலில் பட வேண்டும்.

* செயற்கை பானங்கள் கண்டிப்பாக வேண்டாம்.

* ஆழ்ந்த மூச்சினை தினமும் 2-5 நிமிடங்கள் வரை இருமுறை செய்யுங்கள்.

* காலை அரிசி உணவு, மதியம் அரிசி உணவு, இரவு அரிசி உணவு என்று இல்லாமல் பல வகை உணவுகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

* இரவு 10 மணிக்கு தூங்கச் செல்வது தவறு.

* ‘நொறுங்க தின்றால் நூறு வயது’. உணவினை நிதானமாய் நன்கு மென்று உண்ணுங்கள்.

* இரவு படுக்கச் செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவினை முடித்துக் கொள்ளுங்கள்.

* அவ்வப்போது உண்ணாவிரதம் இருங்கள்.

* பசிக்காமல் ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.

* கொஞ்சம் நல்ல நண்பர்களோடு பேசுங்கள்.

* நீச்சல் தெரியுமா? பழகிக் கொள்ளுங்கள். சிறந்த உடற்பயிற்சி. மன மகிழ்வும் தரும்.

* செருப்பு, ஷூ இவைகளை தரமானதாக வாங்குங்கள்.

* வசதி இருந்தால் அவ்வப்போது மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

* மனக்கவலை இருக்கும் பொழுது தூங்காதீர்கள். பாட்டு கேளுங்கள். புத்தகம் படியுங்கள்.

* அறிவுப்பூர்வமான சிந்தனை உடையவர்களிடம் பேச்சே வேண்டாம். உங்களை அது பாதிக்கும்.

* ஆரோக்கியம் உங்கள் வாழ்வின் உரிமை என உணருங்கள்.

Sunday, 9 February 2020

நகரங்களையே வெட்கப்படச் செய்யும் 10 இந்திய கிராமங்கள்!

நகரங்களையே வெட்கப்படச் செய்யும் 10 இந்திய கிராமங்கள்!

 ”காடுகள் அழிந்து போனால் இந்தியாவும் அழிந்து போகும்...” என்றார் மஹாத்மா காந்தி.  

இந்தியாவில் சுமார் 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 68.8 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் கிராமப்புற வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 10 தனித்துவமான கிராமங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 

ஒரு பொதுவான நோக்கத்திற்காக குடியிருப்பவர்கள் ஒன்று திரண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த கிராமங்களே சான்றாகும். முழுமையான சூரியஒளி மின் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் கிராமம் முதல் 60 மில்லியனர்களைக் கொண்ட கிராமம் வரை இந்தக் கதைகள் விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அடுத்தவர்கள் உணர்வைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை நிரம்பியதாகும். 

1. கதவுகள் இல்லாத கிராமம் – சனி சிங்கப்பூர், மஹாராஷ்டிரா.

இந்த கிராமத்தில் வீடுகள் மட்டுமன்றி வங்கிகளுக்கும் கதவுகள் இல்லை. சனி சிங்கப்பூர் மஹாராஷ்டிராவின் அஹமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பிற்கான தேவை இல்லை என்று நினைக்கின்றனர். இங்கு இந்துக்களின் கடவுளான சனி பகவானின் கோயில் உள்ளது. இவர் இந்த கிராமத்தைப் பாதுகாப்பதாக இங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.சனி கடவுள் இந்த கிராமவாசி ஒருவரின் கனவில் தோன்றி இங்குள்ள கதவுகளை நீக்கும்படி கூறியிருக்கிறார். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால் பல நூறாண்டுகளாக இந்த கிராமத்தில் எந்தவித திருட்டுப் புகாரும் பதிவாகவில்லை. கிராமத்தின் பாரம்பரியத்தைப் பின்பற்றி 2011-ம் ஆண்டு யூகோ வங்கி இந்த கிராமத்தின் பூட்டில்லாத கிளையைத் திறந்தது. இதுவே நாட்டின் கதவுகளில்லாத முதல் வங்கியாகும்.

 2. இந்தியாவின் முதல் சூரியஒளி மின் உற்பத்தி செய்யும் கிராமம் – தர்னை, பீஹார்.

தர்னை பீஹாரின் ஜெஹனாபாத் மாவட்டத்தில் போத்கயாவிற்கு அருகில் உள்ளது. சமீபத்திய காலம் வரை இங்கு மின்சார வசதி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமவாசி ஒருவர் இந்த பிரச்சனையை கையில் எடுத்தார். க்ரீன்பீஸ் உதவியுடன் சூரியஒளி மின் உற்பத்தி செய்யும் மைக்ரோ க்ரிட்டை நிறுவியுள்ளனர். இதனால் 450-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் 50 வணிக நிறுவனங்களுக்கும் 24X7 மின்சாரம் கிடைக்கிறது.  இந்த கிராமத்தில் உள்ள 2,400 பேர் தங்களது மின்சாரத் தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர். தர்னையில் உள்ள குழந்தைகள் பகல் நேரத்தில் மட்டுமே படிக்க முடியும் என்கிற நிலை தற்போது இல்லை. போதுமான சாலை விளக்குகள் இருப்பதால் பெண்கள் இரவிலும் பயமின்றி வெளியே செல்லலாம். சிறிய தொழிற்சாலைகள் செயல்படத் துவங்கி கிராமம் செழித்து வருகிறது.

 3. இந்தியாவில் மூங்கில் சார்ந்த பொருளாதார வளர்ச்சியடைந்த முதல் கிராமம் – மெந்தா லேகா மகாராஷ்டிரா.

மெந்தா லேகா மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்குடி கிராமமாகும். ஆறு ஆண்டுகள் சட்டரீதியான போராட்டத்திற்குப் பிறகு இந்த கிராம சமூகத்திற்கு வன உரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவில் வன உரிமை வழங்கப்பட்ட முதல் கிராமம் இது தான். இன்று இந்த கிராமத்தின் பொருளாதாரத்தில் மூங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த கிராமத்தில் வசிக்கும் 450 பேரில் பெரும்பாலானோர் கோண்ட் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒன்றிணைந்து பேப்பர் துறைக்கு மூலப்பொருளாக பயன்படுத்த மூங்கில் சாகுபடி செய்கின்றனர். கிராம மக்கள் கோடிகளில் லாபம் ஈட்டுகின்றனர். இவ்வாறு ஈட்டப்படும் பணத்தை பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் சமூக நல நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். 


4. அனைவரும் சமஸ்கிருதம் பேசும் கிராமம் – மத்தூர், கர்நாடகா.

மத்தூர் கிராமம் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவிலேயே இந்த பகுதியில் தான் பழமை வாய்ந்த மொழியான சமஸ்கிருதம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் சுமார் 5,000 கிராமவாசிகள் ஒருவரோடொருவர் சமஸ்கிருத மொழியிலேயே உரையாடுகின்றனர். குழந்தைகள் பத்து வயதிலேயே வேதம் கற்கின்றனர். இங்குள்ள சாலைகளில் செல்லும் போது அனைத்து விதமான உரையாடல்களையும் சமஸ்கிருத மொழியிலேயே பரிமாறிக் கொள்வதைப் பார்க்க முடியும்.  1981-ல் ஒரு நிறுவனம் பயிற்சி பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்தது. இதன் காரணமாக இங்குள்ள கிராமவாசிகள் இந்த மொழியை புதுப்பித்து சமஸ்கிருதத்தை தங்களது பிரதான மொழியாக மாற்ற முயற்சி மேற்கொண்டனர். 

5. இந்தியாவின் ஏழ்மையான கிராமங்களில் ஒன்றாக இருந்து செழிப்பாக மாறிய கிராமம்  அச்சலா, ஒடிசா.

அச்சலா கிராமம் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ளது. முன்னர் இந்தியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது. பல நேர்மறையான நடவடிக்கைகளால் இந்த கிராமத்தின் நிலை மாறி வருகிறது. இன்று இங்கு முந்திரி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்து வருகிறது.  சந்தையி ஒரு கிலோ முந்திரி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கிராமத்தினரின் வருவாய் அதிகரிக்க உதவியுள்ளது. 
விரைவாக வருவாய் ஈட்டித்தருகிறது. அத்துடன் இதற்கான தண்ணீர் தேவையும் குறைவு. தற்சமயம் 250 குடும்பங்களில் 100 குடும்பங்கள் முந்திரி வளர்க்கின்றனர். இதனால் வருவாய் அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்துள்ளது

. 6.  உயர்தர வசதிகள் கொண்ட கிராமம் – பன்சாரி, குஜராத் பன்சாரி கிராமம்.

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சிறிய கிராமத்தில் இலவச வைஃபை, சிசிடிவி கேமராக்கள், ஏசி வசதியுடன் கூடிய பள்ளிகள், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் போன்ற வசதிகள் உள்ளது. மெட்ரோ நகரங்கள் கூட வெட்கப்படும் அளவிற்கு இங்கு உயர்தர வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பன்சாரியில் இரண்டு ஆரம்பப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையம், முறையான சாலை விளக்குகள், சிறப்பாக செயல்பட்டு வரும் வடிகால் அமைப்பு ஆகியவை உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி உள்ளது. இவை அனைத்தும் 23 வயதில் கிராமத்தின் தலைவராக ஆன ஹிமான்ஷு படேல் அவர்களால் சாத்தியமாயிற்று.

 நார்த் குஜராத் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அரசாங்க திட்டங்கள் தனது கிராமத்தில் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்தார். கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தினார். அப்போதிருந்து இந்த கிராமத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. 

7.60 மில்லியனர்களைக் கொண்ட கிராமம் – ஹைவேர் பஜார், மஹாராஷ்டிரா.

ஹைவேர் பஜார் மஹாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பணக்கார கிராமமாகும். இந்த கிராமம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மஹாராஷ்டிராவிலேயே அதிக வறட்சி பாதிப்பிற்கு ஆளாகும் பகுதியாக கருதப்பட்டது. 1995-ல் தனிநபர் வருமானம் 830 ரூபாயாக இருந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் கிராமவாசிகளில் ஒரே முதுகலை பட்டதாரியான பொபாட்ராவ் பவர் கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் மிகுந்த தயக்கத்துடன் போட்டியிட்டு தலைவரானார். அவர் பொறுப்பேற்றவுடன் கிராமத்தில் இருந்த 22 மதுக்கடைகளை மூட மக்களை சம்மதிக்க வைத்தார். ஏழை விவசாயிகளுக்கு கடன் வழங்க பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா உடன் கிராம் சபா இணைந்து செயல்பட ஏற்பாடு செய்தார்.  

35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரேவின் பணிகளால் உந்துதலளிக்கப்பட்டு ஹைவேர் பஜாரில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்களைத் துவங்கினார். 

இந்த கிராம மக்கள் 52 மண் அணைகளையும், 32 கல் அணைகளையும் 9 தடுப்பணைகளையும் கட்டினர். சுமார் 300 திறந்தவெளி கிணறுகளையும் தோண்டினர். 

நிலத்தடி நீர் அதிகரித்து கிராமம் செழிப்பானது. இன்று இந்தியாவிலேயெ அதிக தனிநபர் வருவாய் கொண்ட கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமவாசிகளின் சராசரி மாத வருவாய் 30,000 ரூபாய். இதில் உள்ள 235 குடும்பங்களில் 60 குடும்பங்கள் மில்லியனர்களாக உள்ளனர். 

8. ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மவ்லின்னாங், மேகாலயா.

மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்லின்னாங் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகும். 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வீட்டிலும் முழுமையாக பராமரிக்கப்பட்ட கழிவறைகள் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிவுகளை சேகரிக்க மூங்கிலால் ஆன குப்பைத் தொட்டிகள் உள்ளன. இந்த கிராமத்தில் புகை பிடிப்பதும் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகள் குழியில் புதைக்கப்பட்டு உரமாக பயன்படுத்தப்படுகிறது.  

கிராம மக்கள் ஒன்று திரண்டு பொது இடங்கள், பள்ளிகள், க்ளினிக் ஆகிய பகுதிகளை சனிக்கிழமைகளில் சுத்தம் செய்கின்றனர். காசி பழங்குடியினர் அதிகம் உள்ள இந்த கிராமத்தில் தாய்வழி ஆட்சி உள்ளது. மேலும் இது நூறு சதவீத கல்வியறிவு பெற்ற கிராமமாகும். 

9. ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரங்களை நடும் கிராமம் – பிப்லான்ட்ரி,

ராஹஸ்தான் பெண் குழந்தையை காப்பாற்றும் உன்னத முயற்சியுடன் சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் இந்த கிராம மக்கள் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரங்களை நடுகின்றனர். மேலும் பிப்லான்ட்ரி கிராம மக்கள் பெண் குழந்தை வளர்ந்ததும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஈடும் வருவாய் தொகையை வைப்பு நிதியாக மாற்றுகின்றனர்.  பெண் குழந்தை பிறந்ததும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மரங்களை நட்டு முறையாகப் பராமரிக்கின்றனர். 

பல ஆண்டுகளாக கால் மில்லியன் மரங்களை நட்டுள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் கற்றாழை வளர்ப்பிலும் ஈடுபட்டு அவற்றைக் கொண்டு ஜூஸ், ஜெல் ஆகிய பொருட்களை தயாரித்து சந்தைப் படுத்துகின்றனர். 

பல ஆண்டுகளாக பிப்லான்ட்ரி கிராம மக்கள் இவற்றைப் பின்பற்றியதால் அவர்களது வாழ்வாதாரத்திற்கான ஒரு வாய்ப்பாகவே இது மாறியுள்ளது.

 10. முன்னர் தரிசு நிலமாக இருந்த பகுதி தற்போது சுயசார்பிற்கான மைல்கல்லாகவே மாறியுள்ள கிராமம்  கத்பான்வாடி, மஹாராஷ்டிரா.

கத்பான்வாடி மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ளது. முன்பு தரிசு நிலமாக இருந்த இந்தப் பகுதி இந்த கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியரான பஜந்தாஸ் விட்டல் பவார் அவர்களின் நீர் பாதுகாப்பு முயற்சியால் இன்று சுய சார்புடன் விளங்குகிறது. 

இந்த கிராமத்திலேயே இளநிலை பட்டம் பெற்ற முதல் நபரான பஜந்தாஸ் 28 ஆண்டுகள் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு தனது பணியைத் துறந்து கிராமத்தை மேம்படுத்துவதில் முழு நேரமாக ஈடுபட்டார். 

1988-ம் ஆண்டு புனேவில் இருந்து மீண்டும் தனது கிராமத்தில் குடி புகுந்தார். 

ஆங்கில கட்டுரையாளர் : சௌரவ் ராய் | தமிழில் : ஸ்ரீவித்யா