Wednesday, 23 December 2020

பெண்களுக்கு அரை மணி நேர உடற்பயிற்சி தரும் ‘சூப்பர் பவர்’

பெண்கள் தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அன்றாடம் அவர்களது உடலுக்கு தேவையான சூப்பர் பவர் கிடைத்துவிடும். முதியோர்கள் தளர்ந்துபோய் காணப்படுவார்கள். அவர்கள் நடக்கவே சிரமப்படுவார்கள். எதிர்காலத்தில் அப்படி தள்ளாடும் நிலையை தவிர்க்க வேண்டும் என்றால் இப்போதிருந்து பயிற்சி மூலம் உடலை வலுப்படுத்துங்கள்.

உடலை வலுப்படுத்துதல் என்றால் ஜிம் பயிற்சியாளர் போன்று தசைகளை வளர்த்து உடலை கட்டுறுதி செய்து காட்டுவது அல்ல. அப்படிப்பட்ட வலு சராசரியான பெண்களுக்கு தேவையில்லை. ஓடுவதற்கும், குதிப்பதற்கும், வேகமாக நடப்பதற்கும் தேவையான சக்தி எப்போதும் இருந்தால் அதுவே போதுமானது. அதை வைத்தே அன்றாடம் தேவையான சூப்பர் சக்தியை பெற்றுவிடலாம்.

உடல் குண்டாக இருப்பவர்கள் அதை நினைத்து கவலையடைய வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று பயிற்சி பெறவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவையால் உடல் எடையை குறைத்திட முடியும். ஆனால் அவைகளை தொடர்ச்சியாக கடைப்பிடித்திட வேண்டும். எப்போதுமே உணவில் சமச்சீரான சத்துணவு இடம்பெறுவது அவசியம். கார்போஹைட்ரேட், புரோட்டின், பைபர், கொழுப்பு போன்ற அனைத்து சத்துக்களும் தினசரி உணவில் இடம்பெறவேண்டும்.

தினமும் காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிப்பதுபோல, பல் துலக்குவது போல உடற்பயிற்சியும் அவசியம். அன்றாடம் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதைவிட, அவசியமான பயிற்சிகளை குறைந்த நேரம் செய்தாலே போதுமானது. அரை மணிநேரம் அத்தியாவசியமான உடற்பயிற்சிகளை செய்தால் போதும்.

சாதாரண பயிற்சிகளை ஏரோபிக், அன்ஏரோபிக் என்று இருவகையாக பிரிக்கலாம். ஒரே தாளத்தில் தொடர்ச்சியாக செய்யும் பயிற்சிகள் ஏரோபிக் எனப்படுகிறது. ஓடுவது, நடப்பது, நீந்துவது போன்றவை அந்த வகையை சார்ந்தது.

குறைந்த நேரத்தில் கூடுதல் சக்தியை செலவிடும் அனைத்து உடற்பயிற்சிகளும் அன்ஏரோபிக் ஆகும். அதனை செய்யும்போது தலை முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளும் பலம்பெறும். எடையை தூக்குதல், படிகளில் ஏறி இறங்குதல் போன்றவைகளை அடிப்படையாக கொண்டவை இந்த வகை பயிற்சிகள்.

உடற்பயிற்சி செய்ய எந்த நேரம் ஏற்றது? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். உடற்பயிற்சிக்கான குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் இல்லை. அவரவருக்கு சவுகரியமான நேரத்தில் மேற்கொள்ளலாம். காலையில் விழித்து அதிக சக்தியுடன் இருப்பதால் அந்த நேரத்தை பெரும்பாலானவர்கள் பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்யலாமா?

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குறைந்த அளவில் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு கலந்ததாக அந்த உணவு இருக்கவேண்டும். காலை உணவில் பழங்கள் சேர்த்துக்கொண்டால் அதில் இருந்து கார்போஹைட்ரேட்டும்- முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து புரோட்டினும், உலர் பழங்களில் இருந்து நல்ல கொழுப்பும் கிடைக்கும்.

ஒருவர், ஒரு நாள் சாப்பிடவேண்டிய உணவை பல பாகங் களாக பிரிக்கவேண்டும். 7 கிராம் புரோட்டின், 9 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் கொழுப்பு போன்றவை ஒரு பாகம் உணவில் இருந்து கிடைக்கவேண்டும். அவ்வாறு நாள் ஒன்றுக்கு 12 பாகம் உணவு உடலுக்கு தேவை. உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம்.

முதலில் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளில் இருந்து தொடங்கவேண்டும். ‘வாம்அப்’பிற்கு பிறகு தசைகளை இலகுவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். காலையில்தான் செய்யவேண்டும் என்பதில்லை. அவரவருக்கு சவுகரியமான நேரத்தில் மேற்கொள்ளலாம். முதியவர்கள் வாரத்தில் மூன்றரை முதல் நான்கு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

வெயில் நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

சூடான நேரத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அப்போது அதிகமாக வியர்வை வெளியாகி உடலில் நீர்ச்சத்து குறையும். அதனால் உடலில் சோடியம் இழப்பு ஏற்பட்டு சோர்வு தோன்றும். இத்தகைய நெருக்கடி ஏற்படாமல் இருக்க, உடற்பயிற்சி செய்யும்போது சிறிய அளவில் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும். எலுமிச்சை அல்லது சாத்துக்குடி கலந்த நீரில் சிறிது உப்பும் கலந்து அவ்வப்போது பருகிவந்தால் சோர்வு விலகும். பயிற்சியின்போது ஒரே நேரத்தில் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் பருகிவிடக்கூடாது.

Monday, 21 December 2020

மகிழ்ச்சிக்கு பூட்டு போடாதீங்க...

மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல. ஆனால் அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் மகிழ்ச்சியான நபராக தங்களை வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் நிம்மதி இன்றி தவிப்பார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே அவர்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

மகிழ்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. உள் மனம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் எந்த விஷயத்தையும் ரசித்து, அனுபவித்து செய்ய முடியாது. வாழ்க்கையில் நிம்மதி நிலைத்திருக்காது. முகத்தில் எவ்வளவு புன்னகையை வெளிப்படுத்தினாலும் உண்மையிலே மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் துக்கம்தான் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். போலி புன்னகையால் மகிழ்ச்சியை ஒருபோதும் நிரந்தரமாக்க முடியாது.

மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பவர்கள், வாழ்க்கை எப்போதுமே கடினமானது அல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மகிழ்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் கடுமையானதாகவே தோன்றும். எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு கடுமையாக முயற்சிக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் இறுதியில் சோகமும், ஏமாற்றமும்தான் நேரும் என்று தாங்களாகவே முடிவு செய்துவிடுவார்கள்.

மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பவர்கள் யார் மீதும் எளிதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் நம்பிக்கையின்மை தலைதூக்கும். மற்றவர்களை நம்புவதற்கு பயப்படுவார்கள். அதிலும் புதிய நபர்களிடம் அதீத பயம் கொள்வார்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தங்களை சந்திக்கும் நண்பர்களுடன் உறவை வளர்த்துக்கொள்வார்கள்.

மகிழ்ச்சியற்று இருப்பவர்கள் தங்களை சுற்றி நடக்கும் எதிர்மறையான விஷயங்கள் மீதுதான் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உலகில் நடந்த மோசமான நிகழ்வுகள், எதிர்மறையான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். அவர்களிடம் நேர்மறையான விஷயங்களை பற்றி பேசினால் ஆர்வமாக கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். அவை பற்றி பகிர்ந்துகொள்வதற்கு எந்த விஷயமும் அவர்களிடம் இருக்காது. மகிழ்ச்சியான மக்கள் உலகளாவிய பிரச்சினைகளில் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் இரண்டையும் தெரிந்துவைத்திருப்பார்கள்.

மகிழ்ச்சி அற்றவர்கள், மற்றவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள். மற்றவர்களை தங்களுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமை கொள்வார்கள். ஒரே நபருக்கு அதிர்ஷ்டமும், சூழ்நிலையும் மீண்டும் மீண்டும் சாதகமாக இருக்காது என்பதை மகிழ்ச்சியான மக்கள் புரிந்துகொள்வார்கள். தங்களின் அடையாளத்தையும், தனித்துவத்தையும் ரசித்து அனுபவிப்பார்கள். தோல்வியை சந்தித்தாலும் மற்றவர்களின் வெற்றியை மோசமாக விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் மகிழ்ச்சியற்ற நபர்கள் தங்களை விட சிறந்துவிளங்குபவர்கள், சாதிப்பவர்கள் மீது வெறுப்பு கொள்வார்கள்.

மகிழ்ச்சியற்றவர்கள், எதிர்காலம் பற்றிய சிந்தனையை எதிர்மறையான எண்ணங்களால் நிரப்பி இருப்பார்கள். எதன் மீதும் நம்பிக்கை வைக்காததால் எந்தவொரு முடிவையும் அறிந்துகொள்வதற்கு பொறுமை இருக்காது. தாங்கள் விரும்பியபடி நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். எப்போதும் அவர்களிடம் ஒருவித கவலை சூழ்ந்திருக்கும்.

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வார்கள். சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்ப்பார்கள். அவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் நேர்மறையான அதிர்வுகளையே வெளிப்படுத்தும். ஆனால் மகிழ்ச்சி அற்றவர்கள் நடந்து முடிந்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு அதிகமா... மருத்துவம் சொல்வது என்ன?

கோடைக்காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்கின்றன சில ஆய்வுகள். இதயம் சம்பந்தப்பட்ட இதய வலி, இதயத்தில் பாரம் ஏற்பட்டதைப் போன்ற உணர்வு உள்ளிட்ட பிரச்னைகளோடு புறநோயாளிகளாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை குளிர்காலத்தில் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. மேலும், தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

குளிர்காலத்துக்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு, குளிர்காலத்தில் வரும் மாரடைப்புகளைத் தடுக்க முடியுமா என்று விளக்குகிறார் இதயநோய் மருத்துவர் கே.சையது அப்துல் காதர்.

``குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அனுபவ ரீதியாகவும் அதைப் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாரடைப்பு அறிகுறிகளோடும், மாரடைப்பு ஏற்பட்டும் வழக்கத்தைவிட அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். குளிர் நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

இதய ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிமம் (Cholesterol Blocks) சிதைந்து பரவத் தொடங்கும். அவ்வாறு பரவும் கொழுப்பு ரத்தக்குழாய்களில் ரத்த உறவை ஏற்படுத்தும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. குளிர்காலத்தில் குளிர்ச்சி அதிகரிக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்கும் தன்மை அதிகரிக்கும். அதனால் கொழுப்புப் படிமம் சிதைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதனால்தான் குளிர்காலத்தில் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

பொதுவாகவே குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் போன்ற ஃப்ளூ வகை நோய்த்தொற்றுகள் அதிகமாக ஏற்படும். அந்தத் தொற்றுகளுக்கு காரணமான சில வைரஸ்கள் ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பு சிதைவதற்கு காரணமாக அமையும். அதனால் சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு மாரடைப்பு வரலாம்.

குளிர்காலத்தில் உடலுழைப்பு மிகவும் குறைந்துவிடும். குளிர் காற்று, குளிர்ந்த சுற்றுச்சூழலில் வேலை செய்யும்போது வழக்கத்தைவிட சற்று கடினப்பட்டு வேலைகளைச் செய்ய வேண்டி வரும். இவை இரண்டுமே மாரடைப்புக்கான காரணமாக இருக்கின்றனர். சில ஆய்வுகளிலும் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

45 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்குப் பொதுவாகவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாகக் குளிர்காலத்திலும் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ரிஸ்க் சற்று அதிகமே. ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கும் அவர்களின் இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுவோருக்கு வேலை தொடர்பான அழுத்தம் அதிகரிக்கிறது. நீண்ட நேர வேலை, தூங்காமல் வேலை பார்ப்பது ஆகியவற்றால் தூக்கமின்மை ஏற்படும். தூக்கமின்மையால் மனஅழுத்தத்தைக் கொடுக்கும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புப் படிமம் சிதைந்து, ரத்த உறைவை உண்டாக்கி, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவதால் உடலுழைப்பு முற்றிலும் பாதிக்கப்படும்.

வேலைக்குச் செல்வது, வருவது, மாடிப்படி ஏறுவது போன்ற சிறிய சிறிய நடவடிக்கைகள்கூட குறைந்துவிடும். வீட்டிலிருக்கும்போது பெரும்பாலானவர்களால் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற முடிவதில்லை. நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் என்னுடைய நோயாளிகள் பலருக்கு உடல் எடை அதிகரிப்பு, கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் மாரடைப்புக்கான காரணிகளாக அமைகின்றன. கோவிட்-19 தொற்றினாலும் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதிக ரிஸ்க் பட்டியலில் இருப்பவர்கள் தங்களின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கொலஸ்ட்ரால் இருந்தால் அதற்கான சிகிச்சைகள், மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும் குளிர்காலத்தில் அதிக கடின வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற விஷயங்களை குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டும். புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதைக் கைவிட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வாய்ப்புள்ளது.

நடு நெஞ்சுப் பகுதியிலோ வலது, இடது பக்க நெஞ்சிலோ வலி ஏற்படலாம். நெஞ்செரிச்சல், நெஞ்சுப் பகுதி கனமாக இருப்பது போன்று உணர்தல், நெஞ்சு வலியுடன் வியர்த்தல், மூச்சுத்திணறல், நடந்தால் நெஞ்சு வலி அதிகரித்தல். கீழ்த்தாடையிலிருந்து தொப்புள் வரை எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்றார்.

Thursday, 10 December 2020

கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...

கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. அதுதான் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும். நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

தலைமுடியில் நீண்ட நேரம் எண்ணெய் இருந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறானது. தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.

தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. கறிவேப்பிலை, வேப்ப இலை, வெந்தயம், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்.

குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும். கனமான, அடர்த்தியான டவல்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது தலைமுடியை விரைவில் சேதப்படுத்திவிடும்.

தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள், திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.

குழந்தைகளை குளிப்பாட்டியதும் தலைக்கு மட்டுமின்றி கழுத்து, முதுகு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தடவி வருவது நல்லது. ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும அழகை மேம்படுத்தும் தன்மை கொண்டவை.

தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் கிருமிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். வியர்வை, நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டெடுத்து சருமத்திற்கு நலம் சேர்க்கும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.