Monday, 18 March 2019

பெற்றேன் பிள்ளை என்று இல்லாமல் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நற்சொற்படி வளருங்கள்.

பெற்றேன் பிள்ளை என்று இல்லாமல் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப
நற்சொற்படி வளருங்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு.

1.உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு ஐந்து  நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து  அவர்களைத் தொட்டு எழுப்பாட்டுங்கள்.

2.அவர்கள் தூங்குமிடத்திற்குச் சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களைக் குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடனும் எழும்புவதற்குத் துணை புரியும்.

3.உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப்படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்துத் தர வேண்டுமா? நீ நல்ல ஒரு திறமைசாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள். அவர்களை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள்.

4.காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒரு காலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணி விடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகைத் தடவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமிடையில் ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செமிபாடடைவதற்கும் காரணமாய் அமைந்து விடும்.

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7.குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8.உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

9.பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர விடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10.பாதை ஒழுங்குகளைக் கற்றுக் கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன் மாதிரியாக நடந்து அவர்களை வழி நடத்துங்கள்.

11.குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துரைங்கள்.

12.பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13.அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்.

14.பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15.குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பயன் பெறவும் வழி காட்டுங்கள்.

16.சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17.அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18.இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுங்கள். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது (பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டு பண்ணும், சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதைப் புரிய வையுங்கள்.

இப்படித் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:நம் தவறான வாழ்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தரமான தீர்வைத் தர இயலாது.

No comments:

Post a Comment