Sunday, 23 October 2016

வெண்ணெய்

தாய்ப்பால் வெண்ணெய்:

தாய்ப்பால்  வெண்ணெய்க்கு கண், கை, கால், நாசி ஆகியவற்றில் உண்டாகும் எரிச்சல் நீங்கும்.

பசு வெண்ணெய்:

பசுவின் வெண்ணெய்க்கு கண் நோய், கண் எரிச்சல், பீளை சாரல் பிரமேகம் ஆகியவை நீங்கும். பசி உண்டாகும்.

எருமை வெண்ணெய்:

எருமை வெண்ணெயினால் பித்த மூத்திர கிரிச்சரம் நீங்கும். மலாசயக்கிருமி, அக்னி மந்தம், வாத ரோகம், கபாதிக்கம், கரப்பான் தொந்தரவு முதலியன உண்டாகும்.

வெள்ளாட்டு வெண்ணெய்:

வெள்ளாட்டு வெண்ணெய் சுரரோகம், பித்த நோய், கரப்பான் ஆகியவற்றை நீக்கும். பசியை உண்டாக்கும்.

ஒட்டகத்தின் வெண்ணெய்:

ஒட்டக வெண்ணெயானது நல்ல அழகையும், மந்தத்தையும், வாத ரோகத்தையும் உண்டாக்கும். நீரிழிவையும், பித்த கோபத்தையும் நீக்கும்.

பசுவின் நெய்:

பசுவின் நெய்யானது தாகம், உழலை பிணி, சுட்சம ரோகம், வாந்தி, பித்தாதிக்கம், வாத விஷம், விரணப்பிரயோகம், வயிற்றில் எரிவு, பித்த விக்கல், இருமல், வயிற்று வலி சினைப்பு, குடல் நெளிதல், அசதி, சோம்பல், மூலரோகம் ஆகியவற்றை நீக்கும்.

காராம் பசு நெய்:

காராம் பசு நெய்யால் விழிக்கு ஒளியும், சரீர புஷ்டியும், பொன் மேனியும் உண்டாகும். கண், புருவம், நெற்றி சிரசு இவற்றை பற்றிய நோய்கள் விலகும்.

எருமை நெய்:

எருமை நெய்யால் அறிவு, அழகு, கண்ணொளி இவை மத்திமமாகும். வாத பித்த தோஷம், கரப்பான் ஆகியவை உண்டாகும்.

வெள்ளாட்டு நெய்:

வெள்ளாட்டு நெய் அதிசிலேஷ்ம ஆதிக்கத்தையும், வாத கோபத்தையும் போக்கும். சரீரத்தை வளர்ப்பதும் அல்லாமல் கண் ஒளியையும் உண்டாக்கும். பத்தியத்துக்கு உதவும்.

செம்மறியாட்டு நெய்:

மதுரமான செம்மறியாட்டு நெய்யால் கப நோய் அதிகரிக்கும்.

பள்ளாட்டு நெய்:

பித்த நோயை ஒழிக்கும். மந்தம் உண்டாக்கும்.

ஒட்டகத்தின் நெய்:

ஒட்டக நெய்யானது அக்னி மந்தம் செய்தாலும், சுக்கில தாதுவை விருத்தி செய்யும்.

கலப்பு நெய்:

எருமை நெய் முதலான கலப்பு நெய்க்கு சுக்கிலம் பெருகும். தீபனமும் உண்டாகும். பித்த தோஷமும், தேகக்கொதிப்பால் ஆகிய பித்த சுரமும் நீங்கும். உடலும் வழுவாகும்.

பன்றி நெய்:

பன்றி நெய்யானது நீர்க்கடுப்பையும், இரத்த மூலக்கிராணியையும், வாதக்கடுப்பு முதலிய பிணிகளையும் அகற்றும்.

உடும்பு நெய்:

உடும்பு நெய்யானது இரத்த கிராணியை நீக்கும்.

காக்கை நெய்:

காக்கை நெய்யானது காமாலையை குணப்படுத்தும்.

ஆமை நெய்:

ஆமை நெய்யானது இரத்த மூலத்தை நீக்கும்.

ஓணான் நெய்:

ஓணான் நெய்யானது பின்னிசைவை குணமாக்கும்.

கரடி நெய்:

கரடி நெய்யால் வாத வேகமும், பாத வெடிப்பும் அகலும்.

ஆம‌ண‌க்கு நெய்:

உஷ்ண ஆதிக்கமுள்ள முத்து கொட்டை நெய்யை முறைப்படி குடித்தால் விரோசனம் ஆகும்.இதனால் கோரவாதம், குன்மம், குடல் ஏற்றம், உடல், கண், மூக்கு, செவி, வாய் இவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும். பொன் நிறமும், தாது விருத்தியும் உண்டாகும்.

சிற்றாமணக்கு நெய்:

சிற்றாமணக்கு நெய்யானது பற்பல ஔஷதங்களின் வெப்பங்களையும், வாயுவினால் மூலத்தில் உண்டாகின்ற உஷ்ணங்களையும் நீக்கும். குழந்தைகளை தாய் வளர்ப்பது போல் உடலை வளர்க்கும்.

எள் நெய்:

எள்ளின் நெய்யால் புத்திக்கு தெளிவு, விழிக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி, தேக புஷ்டி, பலம், தேஜஸ், வாலிபத்தன்மை ஆகியவை உண்டாகும். நேத்திர நோய், செவி நோய், கபால உஷ்ணம், காசம், விரணம் ஆகியவை நீங்கும்.

வாதுமை நெய்:

வாதுமை நெய்யானது ஔஷதங்களினாலும், உழைப்பினாலும் கிளைத்த வெப்பங்களையும், கப தோஷத்தையும் நீக்கும். சமமான உஷ்ணம், சுக்கிலம், பஞ்சேந்திரியங்களுக்கும் ஒளி ஆகியவற்றை உண்டாக்கும்.

வேப்ப நெய்:

வேப்ப நெய்க்கு மகா வாதம், கிரந்தி, கரப்பான், சிரங்கு, ஆகிருஷ்ண ஸ்தம்பன வாதம், சுரம் நீங்கும். பித்தத்தை உண்டாக்கும்.

இலுப்பை நெய்:

இலுப்பை நெய்யால் கரப்பான் கடி விஷம், சிரங்கு, விரணம், வன்மை இவை உண்டாக்கும். சகலமான வாதங்கலும், துர்ப்பலமும் நீங்கும்.

புன்னை நெய்:

புன்னை நெய்யால் சன்னிபாதம், மகா வாத ரோகம், முன்னிசிவும், பின்னிசிவும், ஐவகை வலி, விரணம், கிருமி ஆகியவை நீங்கும்.

புங்கின் நெய்:

மலை புங்கின் பருப்பு நெய் அழகும், ஒளியும் உண்டாக்கும். கரப்பானும், சொறி, சிரங்கும் ஒழியும்.

தேங்காய் நெய்:

தேங்காய் நெய்யினால் நெருப்பினால் எற்பட்ட விரணம், தந்த மூல ரோகம், படர்தாமரை, சிரங்கு முதலியன தீரும். தலை மயிர் நன்றாக வளரும்.

கடுகு நெய்:

சூடுள்ள கடுகு நெய்யால் குன்மம், இரத்த பித்தம், தோல் நோய், மகா வாதம், ஷயம், முளை மூல விரணம், சூலை முதலியன நீங்கும்.

நீரடி முத்து நெய்:

நீரடி முத்து நெய்யை உடலில் பூசினாலும், உள்ளுக்குள் குடித்த்தாலும் வாதம், குட்டம், சிரங்கு, சொறி, சூலை முதலியன நீங்கும்.

முக்கூட்டு நெய்:

எள்ளின் நெய், பசுவின் நெய், ஆமணக்கு நெய் இவை முறையே பித்த வாத கோபங்கள் மீறாமல் தத்தம் நிலையில் பொருந்துவன, ஆதலால் அம்மூன்று வித நெய்களையும் கிரமப்படி கூட்டி காய்ச்சி ஸ்நானம் செய்தால் திரி தோஷங்களால் ஏற்படும் சகல ரோகங்களும் நீங்கும்.

ஐங்கூட்டு நெய்:

ஆமணக்கு, எள்ளு, வேம்பு, புன்னை, புங்கு இவற்றின் நெய்களை கலந்து தைலமாக செய்து உபயோகித்தால் பின்னிசிவு, மகா வாதம், சந்நிபாத சுரம், சுப தோஷம் ஆகியவை நீங்கும்.

முக்கூட்டு நெய் சேர்க்கும் முறை:

வாதம் முதலிய மூன்று தோஷங்களுக்கும் கூட்ட வேண்டிய முறை; வாத தேகிகளுக்கு பசுவின் நெய் மூன்று பங்கு; எண்ணெய் இரண்டு பங்கு; ஆமணக்கு நெய் மூன்று பங்கு.பித்த தேகிகளுக்கு எண்ணெய் ஒரு பங்கு; ஆமணக்கு நெய் இரண்டு பங்கு; பசுவின் நெய் மூன்று பங்கு.சிலேத்ம தேகிகளுக்கு ஆமணக்கு நெய் ஒரு பங்கு; பசுவின் நெய் இரண்டு பங்கு; எண்ணெய் மூன்று பங்கு . இவ்வாறு சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் வெண்ணெய், நெய் வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

1 comment:

  1. #காராம்_பசு

    எங்களிடம் தூய காராம் பசு உள்ளது. வேண்டுவோர் 8973355333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

    எங்களிடம் தூய காராம் பசு பால், காராம் பசு நெய்,
    காராம் பசு கோமியம், காராம் பசு தயிர், காராம் பசு சாணம் உள்ளது. வேண்டுவோர் 8973355333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
    வேண்டுவோர்க்கு Courier மூலம் அனுப்பிவைக்கப்படும்.

    தெய்வீக தன்மை வாய்ந்த காராம் பசு வை பற்றி மேலும் தெரிந்து கொள்ள எங்கள் Channel “https://www.youtube.com/channel/UCbLWF5OIx9o_iHGSytyH7SA” – ஐ Subscribe செய்யவும்.

    Facebook Page: https://www.facebook.com/karampasumadu
    Youtube Video: https://www.youtube.com/watch?v=Z_GLgnR0UTE

    நன்றி.

    ReplyDelete